பித்தப்பை கல் என்பது வேறு! சிறுநீரகக்கல் என்பது வேறு!

  • Dr.Ramesh Kumar Mohan Rao
  • Jan 03, 2018
Appointment                Doctor Opinion          
 
பித்தப்பை கல் என்பது வேறு! சிறுநீரகக்கல் என்பது வேறு!

நம்மில் பலருக்கு திடீரென அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. அதேபோல் கொழுப்பு மிகுந்த உணவுப்பொருளை உண்டபின் வயிற்றுப்பகுதியில் வலி ஏற்படும். இது எதனால்? இதற்கு என்ன செய்ய வேண்டும்? நம்மில் பலர் அவர்களது உயரத்திற்கு பொருந்தாத பருமனுடன் இருப்பர். இவர்களுக்கு தங்கள் தோற்றத்தை - பருமனை மாற்றி அமைத்துக் கொள்ள விரும்புவர். ஆனால் எப்படி என்று தெரியாது?

இப்படி பல வினாக்களுக்கு சரியான தீர்வை www.medicalonline.in ல் தருகிறார் சென்னையில் இயங்கி வரும் மோகன்ராவ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் ரமேஷ்குமார் மோகன்ராவ்.

உடலில் அதிகமாக சேரும் கொழுப்பை அறுவை சிகிச்சை மூலமாகத்தான் அகற்ற வேண்டுமா? மருந்து மாத்திரைகளால் கட்டுப்படுத்த இயலாதா?

பொதுவாக தற்காலத்தில் 23 வயதிலிருந்து 35 வயதிற்குட்பட்ட ஆண் பெண்களுக்குத்தான் இந்த பிரச்சனை அதிகளவில் இருக்கிறது. ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றங்களே கொழுப்பு கூடுதலாக சேர்வதற்கு காரணமாகிறது. முதலில் நோயாளியின் உடலை முழுமையாக பரிசோதனை செய்கிறோம். பிறகு உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை ஏன் தேவை என்பதை நோயாளிக்கு உணர்த்துகிறோம். பிறகு அவர்களின் ஒத்துழைப்புடனும் அனுமதியுடனும் அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறோம். நோயாளி சம்மதித்த உடன் நாங்கள் அறுவை சிகிச்சையை செய்வதில்லை. அதற்கு ஏற்றவாறு உடல்நிலை தகுதியான பின்தான் அறுவை சிகிச்சையை செய்கிறோம். இந்த அறுவை சிகிச்சையானது ஒரு சென்டிமீட்டர் அளவில் துளையிட்டு லேப்ரோஸ்கோபிக் என்ற நவீன கருவிகள் மூலம் கொழுப்புகளை அதாவது அதிகமாக உள்ள கொழுப்புகளை நீக்குகிறோம். ஒரே சமயத்தில் உடலில் உள்ள எல்லா இடத்திலிருந்தும் கொழுப்புகள் அகற்றப்படுவதில்லை. அகற்றப்படவும் கூடாது. ஒருமுறை இடுப்பில் தங்கிய கொழுப்பை அகற்றிவிட்டால், அடுத்த முறை தொடை, அதற்கடுத்த முறை அடிவயிறு என பகுதிபகுதியாகத்தான் கொழுப்புகளை நீக்க இயலும். அதேபோல் ஒரிடத்திலிருந்து ஒருமுறை கொழுப்புகள் அகற்றப்பட்டால் மீண்டும் அவ்விடத்தில் அவை சேராது. இதற்காக அறுவை சிகிச்சைக்கு பிறகு நாங்கள் விசேட உடையையும் சில பயிற்சிகளையும் பரிந்துரை செய்கிறோம். அதனுடன் உணவு உட்கொள்ளும் விடயத்திலும் சில கட்டுப்பாடுகளை வலியுறுத்துகிறோம்.

கொழுப்புகளை அகற்ற அறுவை சிகிச்சையை விரும்பாதவர்கள் என்ன செய்யலாம்? இதற்கான அறிகுறிகள் என்ன? பின்விளைவுகள் என்ன?

உடல் பருமன் இன்றைய இளம்தலைமுறையினர் சந்திக்கும் தலையாய பிரச்சனை. இதனால் அவர்களின் பணித்திறன் பாதிக்கப்படுகிறது. அதனுடன் மனதளவிலும் சோர்வு ஏற்படுகிறது. இதனால் உடல் பருமனைக் குறைக்க எங்களை போன்ற அறுவை சிகிச்சை நிபுணர்களை நாடுகின்றனர். நாங்கள் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற எடை எவ்வளவு என்பதை சர்வதேச அட்டவணையின்படி பரிசோதனை செய்து எடுத்துரைக்கிறோம். அதன் பிறகு அவர்களிடம் தங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு எவ்வளவு என்பதையும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் உணர்த்துகிறோம்.

மூச்சு விடுதலில் சிரமம், மூட்டுவலி, முதுகு வலி ஆகியவை உடல் அதிக எடை இருப்பதற்கான ஏற்படும் அறிகுறிகள் எனலாம்.

துரித வகை உணவுகள், எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுவகைகள், அகால உணவுமுறை ஆகியவற்றால் கூட உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு வாய்ப்பு உண்டு.

வயிறு, தொடை, முகம், ஏன் தற்போது சில ஆண்களுக்கு மார்பகத்தில் கூட தேவைக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்து விடுகிறது. இதை வலியில்லாமல், தழும்பில்லாமல் பக்க விளைவு இல்லாமல் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கிறோம்.

பித்தப்பைக்கல் எப்படி உருவாகிறது? அதற்கான அறிகுறியும், அதற்கு தாங்கள் வழங்கும் சிகிச்சைகளையும் சொல்லுங்களேன்?

கொழுப்புவகை உணவுகளை அதிகமாக உண்பதால் பித்தப்பை கல் உருவாகிறது. வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி, இவையெல்லாம் பித்தப்பையில் கல் இருப்பதற்கான அறிகுறிகள் எனலாம். இந்த அறிகுறிகள் தோன்றியவுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் செய்து கொண்டால் அதன் நிலை தெரிந்துவிடும். அதற்கு பின் இந்த துறையின் நிபுணர்களையோ அல்லது எங்கள் மருத்துவமனையையோ அணுகினால் மிக சரியான முறையில் சிகிச்சைபெறலாம்.

ஒரு கல்லோ ஓராயிரம் கல்லோ பித்தப்பையில் கல் இருந்தால் அது செயல்படாது. பித்தப்பையில் கல் இருப்பது சோதனை மூலம் தெரிய வந்தவுடன் அதனை அறுவை சிகிச்சைமூலம் அகற்றிவிடுகிறோம். பின் தொடர்ந்து நான்கு மாதங்கள் வரை அவர்களை எங்களின் கண்காணிப்பில் வைத்துக் கொள்கிறோம். அந்த சமயங்களில் கொழுப்பு வகை உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று வற்புறுத்துகிறோம். இது பெரும்பாலும் நாற்பது வயதை கடந்த பெண்களுக்குத்தான் அதிகம் வருகிறது.

இன்னும் சிலர் பித்தப்பை கல்லும் சிறுநீரகக்கல்லும் ஒன்றே என கருதுகின்றனர். இது தவறு. பித்தப்பை கல் என்பது வேறு, சிறுநீரகக்கல் என்பது வேறு. சிறுநீரகத்தில் கல் இருந்தால் அதை கரைக்கவோ நீக்கவோ சிகிச்சைஅளிக்கிறோம். ஆனால் பித்தப்பையில் கல் இருந்தால் பித்தப்பையை அகற்றிவிடுவதுதான் சரியான தீர்வு.

காஸ்மடிக் சர்ஜரியைப்பற்றி விளக்குங்களேன்?

தங்களின் உடல் உறுப்புகள் இயல்பாக இல்லை என்று கருதிக்கொண்டு எங்களை தொடர்புக் கொள்பவர்களை நாங்கள் பரிசோதனை செய்து உறுப்புகளை மறுசீரமைப்பு செய்கிறோம். உதாரணமாக பெண்களின் மார்பகத்தை பெரிதாக்கவோ சிறிதாக்கவோ செய்கிறோம். அதேபோல் இந்த வகை சிகிச்சையில் உடலின் வேறு பகுதியில் உள்ள தசைகளை எடுத்து பயன்படுத்துகிறோமே தவிர மேலை நாட்டில் விற்பனையில் இருக்கும் செயற்கை உடலுறுப்புகளை பயன்படுத்துவதில்லை. நோயாளி விரும்பினால் மட்டுமே அம்மாதிரியான செயற்கை உறுப்புகளை பொருத்துகிறோம்.

பெண்களின் மார்பகம் அவர்களின் விருப்பப்படி சீரமைக்கப்பட்ட பின் திருமண வாழ்க்கை எப்போதும் போல் இயல்பாய் இருக்கும். அவர்கள் வழக்கம்போல் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கலாம். காரணம் நாங்கள் மார்பகத்தை சீரமைக்க உடலின் மற்ற பாகங்களிலிருந்து தான் தசைகளை எடுத்தாளுகிறோம். அதைவிட பால் சுரக்கும் நரம்புகளை பாதிக்காத வண்ணம் செயல்படுகிறோம்.

அதேபோல் விபத்தின் போது ஏற்பட்ட வடுக்களை மறைக்கவும் இந்த வகை அறுவை சிகிச்சையினை செய்கிறோம்.

ஆங்கில மருத்துவம் என்றாலே பக்க விளைவு உள்ளது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால் மற்ற மருத்துவமுறைகளில் அறுவை சிகிச்சை வலியுறுத்தப்படவில்லை. இதைப்பற்றி தங்களின் கருத்து என்ன?

ஆங்கில மருத்துவத்தில் தற்போது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்றைக்கு மிக நவீனமுறையில் துல்லியமாக அறுவை சிகிச்சைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சையின் மூலம் நோயாளிக்கு கிடைக்கும் பலன்களில் சற்று காலதாமதம் ஏற்படலாமே தவிர, குணமடைவது உறுதி.

பொதுவாகவே அறுவை சிகிச்சைசெய்துகொள்ள ஏதாவது அளவீடு இருக்கிறதா?

மூன்று மாத குழந்தைக்கும் ஏன் பிறந்து மூன்று நாளே ஆன குழந்தைக்கும் தற்போது அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதேபோல் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நோய் மற்றும் நோயாளியின் தன்மையை பொறுத்து அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அறுவை சிகிச்சைசெய்யப்படுகிறது.

மார்பக புற்றுநோய் தாக்கி ஒருபக்க மார்பகத்தை அகற்றிவிட்டவர்களுக்கு நீங்கள் மார்பக மறுசீரமைப்பு சிகிச்சையை செய்கிறீர்களா?

செய்கிறோம். அவர்களின் உடலில் உள்ள நல்ல திசுக்களை எடுத்து மறுசீரமைப்பு செய்கிறோம். இவ்வகை சிகிச்சையில் அதிகபட்சமாக ஒருமாத காலத்தில் அவர்கள் தங்களின் இயல்பு நிலைக்கு வந்துவிடுவார்கள்.

அடிவயிற்றில் பகுதியிலிருந்து கொழுப்பு அகற்றப்பட்டால் தோலில் சுருக்கம் ஏற்படுமே? அதை எப்படி நீக்குகிறீர்கள்?

அறுவை சிகிச்சைக்கு பிறகு நாங்கள் தயாரித்து வழங்கும் உடையை அணிவதால் இந்த சுருக்கம் நாளடைவில் மறைந்து போகும்.

தங்களுடைய அனுபவத்தில் சந்தித்த மிக சவாலான விடயங்களைப்பற்றி கூறுங்கள்?

சமீபத்தில் 72 வயதான பெண்மணி ஒருவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு அதை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நோயாளிக்கோ இருதயநோய் இருப்பதற்கான வாய்ப்பு இருந்ததால் அறுவை சிகிச்சையின் போது எது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் நாங்கள்அறுவை சிகிச்சைசெய்து அவரை பூரணமாக குணப்படுத்தினோம். இதேபோல் பலவற்றை குறிப்பிடலாம்.

எந்த சிகிச்சைக்கு தங்கள் மருத்துவமனை அடையப்படுத்தப்படுகிறது?

எல்லா விதமான சிகிச்சையும் அளித்தாலும் பித்தப்பைக் கல் மற்றும் அப்பன்டிக்ஸ் ஆகியவற்றிற்கு மிக சிறந்த அளவில் சிகிச்சைவழங்குகிறோம்.

பித்தப்பையில் கல் இருந்தால் பித்தப்பை தன் கடமையை செய்யாது. அதனால் அதனை அகற்றுவது சரி. மேலும் பித்தப்பையில் கல் இருப்பது கண்டறியப்பட்டு அகற்றாவிட்டால் மஞ்சள் காமாலை, புற்றுநோய் ஆகியவை வருவதற்கு வாய்ப்புண்டு. இதனால் இதை மருத்துவர்கள் உறங்கும் புலி என்று குறிப்பிடுகிறார்கள். பித்தப்பையில் கல் தோன்றுவதற்கு இதுதான் காரணம் என்று எதையும் உறுதியாக கூற இயலாது. இருப்பினும் கொழுப்பு வகை உணவுகளை உண்பதை உறுதியாகத் தவிர்த்துவிடுங்கள்.