சிறுநீரக நோயை தடுப்போம்

  • Dr.Amaresan
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
சிறுநீரக நோயை தடுப்போம்

அடுத்து வரும் பத்து ஆண்டுகளில் டொயாலிஸிஸ் மற்றும் சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக  உலகளவில் மக்கள் செலவிடும் தொகை ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலரை தாண்டிவிடும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரும், எம். ஜி. ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவருமான டொக்டர். என், அமரேசன். அத்துடன்ஆண்டு தோறும் ஒரு மில்லியனுக்கும் குறையாத அளவில் சிறுநீரக நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக கவலையுடன் தெரிவிக்கும் அவரை அணுகி, இந்த நோயை தடுக்கவே இயலாதா? என்று கேட்டவுடன், ஏன் இயலாது என்று கூறியதுடன்,  சிறுநீரக நோயை தடுக்க இயலும் என்று உறுதியாக கூறினார். அது என்ன என்பதும், எப்படி என்பதனையும் www.medicalonline.in ல் விளக்கமளிக்கிறார்.

சிறுநீரக நோயை பொறுத்தவரை, நெடு நாளைய சிறுநீரக நோய், இறுதி நிலை சீறுநீரக நோய் என இரண்டாக வகைப்படுத்தலாம். முதலில் சிறுநீரக செயலாமை என்றால் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். நம்முடைய சிறுநீரிலிருந்து ஆல்புமின் எனப்படும் புரதம் அதிகளவில் வெளியாவதும், மூன்று மாதத்திற்கும் மேலாக சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் குறைவாக செயல்படுவதும் தான் சிறுநீரக செயலாமை என்று மருத்துவர்கள் கூறிவருகின்றனர். இது எதனால் ஏற்படுகிறது? என்றால், 40 முதல் 50 சதவீதம் நீரிழிவு நோயாலும், 20 முதல் 30 சதம் உயர் ரத்த அழுத்தத்தாலும் ஏற்படுகிறது. மேலும் ்நெப்ரைடீஸ்ீ என்ற சிறுநீரக வீக்கத்தாலும், சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றுக்களாலும்,சிறுநீரக கற்கள் போன்றவற்றாலும், ்பாலிஸிஸ்டிக் சிறுநீரக நோய்ீ என்ற மரபு வழியாக வரும் சிறுநீரக பாதிப்புகளாலும் இந்த நெடு நாளைய சிறுநீரக நோய் ஏற்படுகிறது. தற்போது உடற்பருமன் காரணமாகவும் இந்த நோய் ஏற்படுவதற்கான சாத்திய கூறு உண்டு என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நோய் நமக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால், காலை நேரத்தில் அதாவது தூங்கி எழுந்தவுடன் முகத்திலும், கண் இமைகளைச் சுற்றிலும் வீக்கம் காணப்பட்டலோ, கால்களில் வீக்கம் காணப்பட்டாலோ அல்லது சிறுநீருடன் ரத்தமும் இணைந்து வெளியேறினாலோ, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வோ அல்லது தடங்கல் ஏற்பட்டாலோ நமக்கும் இந்த நோய் ஏற்பட்டிருக்கிறது என்பதனை தெரிந்து கொள்ளுங்கள். அத்துடன் விலா பகுதியில் சிலருக்கு வலி உண்டாகும். உயர் ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் தாக்குவதற்கான சாத்திய கூறு அதிகம். பல தருணங்களில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு சிறுநீரகமே காரணமாகிறது. எனவே உயர் ரத்த கொதிப்பினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்களுடைய சிறுநீரக செயல்பாட்டினை,  குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பரிசோதித்து கொள்ள வேண்டும்.

இதனை எப்படி கண்டறிவது என்றால், அது எளிமையான சோதனை மூலம் கண்டறியலாம்.நமது சிறுநீரை சோதித்து, அதில் இருக்கும் ஆல்புமின் என்ற புரதத்தின் அளவையும், ்கிரியாட்டினின்ீ என்ற சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனையும்  கொண்டு கணக்கிடலாம். இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறியாவிட்டால், நம்முடைய உடலின் முக்கிய பாகமான இதயத்தை பாதித்துவிடும். இந்த நோயை ஆரம்ப காலகட்டத்தில் கண்டறியாதவர்கள் தான்,  இறுதி நிலை சிறுநீரக நோய்க்கு ஆளாகிறார்கள். இறுதி நிலை சிறுநீரக நோய்க்கு ஆளாகிறாவர்களுக்கு டொயாலிஸிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்ற இரண்டின் மூலமே சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த இரண்டு சிகிச்சைகளுக்கும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட  தெற்காசிய நாடுகளில் அதிக தொகை செலவாகிறது. இந்த இறுதி நிலை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு வாரம் மூன்று முறை டொயாலிஸிஸ் செய்யவேண்டும்.

அத்துடன் எரித்ரோபாய்டின் போன்ற விலையுயர்ந்த மருந்தினை ஊசி மூலம் போட்டுக் கொள்ள வேண்டும். அவசியம் ஏற்படின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்ய நேரிடும். இதற்கு லட்ச கணக்கான ரூபாய் செலவாகும் என்பதால் நடுத்தர மக்களில் 85 சதவீதத்தினர் இதற்கு சிகிச்சை செய்து கொள்ளாமல் புறகணித்துவிடுகின்றனர். இதனால் உலகம் முழுவதிலும் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான இறுதி நிலை சிறுநீரக நோயாளிகள் உருவாகி கொண்டேயிருக்கிறார்கள். இதனை தடுக்காவிட்டால்  இளவயது மரணம் அதிகரிக்கும். மனநிலையில் சோர்வு ஏற்படும். தனி நபர் திறன் குறைந்து,பொருளாதார வளர்ச்சி தேக்கமடையும். இதனை தடுக்கவே இயலாதா? என வினவினால், முடியும் என்று தான் பதிலளிப்பேன். எப்படி என்றால், முதலில் உடல் பருமனாவதை தவிர்க்க வேண்டும். உலகளவில் உடற் பருமனால் தான் நெடுநாளைய சிறுநீரக நோய் தாக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உருவாகிறது  என்று மருத்துவர்கள்  கண்டறிந்திருக்கிறார்கள்.

அடுத்தது ஒழுங்கான தேக பயிற்சி. வாரத்திற்கு ஐந்து நாளாவது,  45 நிமிடங்களுக்கு குறையாமல்  நடப்பது, நீந்துவது, டென்னிஸ் விளையாடுவது போன்றவற்றில் ஈடுபடவேண்டும்.புகைப் பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், தங்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.அதேப் போல் ரத்த அழுத்தத்தையும் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைக்கு பின்னர் ஸ்டாடின்களை உபயோகிக்கலாம். இது அத்தனையும் நெடு நாளைய சிறுநீரக நோயை தடுப்பதற்கான முறைகள்.

நம்மில் ஒரு சிலர், நெடு நாளைய சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அப்படி பாதிக்கப்பட்டிருப்பவர்கள், அதனை இறுதி நிலை சிறுநீரக நோயாக மாறாமல் தடுக்க வேண்டும். அதற்கான செயல்பாடுகள் என்னவென்றால், சிறு நீர் வெளியேற்றத்திற்கு ஏற்றவாறு திரவம் உட்கொள்வதை திட்டமிட வேண்டும். அளவுக்கதிமாக திரவத்தை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவேண்டும். இரத்த அழுத்தத்தினையும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவினையும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். ACEI. ARB  போன்றவற்றை உபயோகிக்கலாம்.ஸ்டாடின்களையும் மருத்துவர்களின் ஆலோசனையின் மூலம்  உபயோகிக்கலாம்.

ரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபின் அளவை 7 முதல் 12 ஜிடில் என்று வைத்திருக்கவேண்டும். சிறுநீரகத்தை பாதிக்கும் யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருந்துகள் பயன்படுத்துவதை  தவிர்க்கவேண்டும். சிறுநீரக கல், ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் ஆகியவற்றிற்கு முறையான சிகிச்சை எடுத்து கொள்ளவேண்டும். வாழ்க்கை முறையினை சீரமைத்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக மருத்துவர்களிடம் தகுந்த கால இடைவெளிகளில் சென்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். இவற்றை ஒழுங்காக கடைபிடித்தால்  சிறுநீரக நோய் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் நம்மை காத்து கொள்ள முடியும்.

தொடர்புக்கு: +91 44  2641 3355